February 16, 2026

காஃபிர் - ஒரு மீள்பதிவேற்றம்

“காபிர்” என்ற சொல் தருகின்ற மெய்ஞ்ஞான தத்துவம்!

“காபிர்” என்ற அறபுச் சொல் யாரைக் குறிக்குமென்று ஆய்வு செய்து பார்ப்போம்.

இச்சொல்லுக்கு அறபு மொழி அகராதியில் பல பொருள் இருந்தாலும் முஸ்லிம்கள் இச்சொல்லை இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கே பயன்படுத்துகின்றார்கள்.

இலங்கையில் வாழும் பௌத மதத்தினரும், இந்து மதத்தினரும், கிறித்துவ மதத்தினரும் “கலிமா” சொல்லி இஸ்லாத்தில் இணைந்து கொள்ளாத காரணத்தினால் இவர்கள் அனைவரும் “காபிர்”கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.

இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்து கொள்ளாத அனைவரையும் இச்சொல் குறிக்கும். இச்சொல் இவர்களை இழிவாகக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக இவர்களின் கொள்கையை சுட்டிக் காட்டும் பெயரே ஆகும். “வஹ்ஹாபீ” என்ற சொல் போன்று.

“காபிர்களின் உறவு கரண்டைக் காலின் கீழ்” என்று அவர்கள் பற்றிப் பேசும் முஸ்லிம்களில் சிலர் சொல்வதுண்டு. இந்த வசனம் அவர்களை இழிவாகக் காட்டும் வசனமென்று எண்ணியே முஸ்லிம்களிற் பலர் சொல்லி வந்துள்ளார்கள். அவர்களுடன் எந்த வகையிலும் உறவு வைத்துக் கொள்ளக் கூடாதென்பதைக் கருத்திற் கொண்டே இவ்வசனம் பயன்படுத்தப்பட்டது. தற்போது இவ்வசனம் பாவிப்பதை முஸ்லிம்கள் நிறுத்தி விட்டார்கள். இதற்குக் காரணம் புரிந்துணர்வும், அறிவு வளர்ச்சியுமேயாகும்.

எனினும் நான் இவ்வசனத்தைக் காபிர்களை உயர்வாகக் காட்டும் வசனமென்றே கருதுகிறேன். ஏனெனில் “காபிர்களின் உறவு கரண்டைக் காலின் கீழ்” என்று சொல்வதற்கும், “காபிர்களின் உறவு காலின் கீழ்” என்று சொல்வதற்கும் வித்தியாசமுண்டு. “கரண்டைக் காலின் கீழ்” என்ற வசனம் காபிர்களுடனான உறவை முற்றாக முறித்துக் கொள்ளாமல் ஓரளவு உறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும், “காலின் கீழே” என்ற வசனம் அவர்களுடனான உறவை முற்றாக முறித்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் தரும். இதை கூரிய புத்தியுள்ளவர்கள் ஆய்வு செய்தால் இவ்வுண்மை துலங்கும்.

இவ்வாறு கூறிய இறைவன் மாற்று மதத்தினர் அனைவரையும் “காபிர்”கள் என்று குறிப்பிட்டுள்ளான். இச்சொல்லுக்கு நிராகரிப்பவன் என்று பொருள் வரும். இந்தப் பொருளுக்குரிய சொல்லை ஏன் அவர்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது? என்பதற்கான காரணம் புரியாமலேயே முஸ்லிம்கள் இச்சொல்லை மற்ற மதத்தினருக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். முஸ்லிம்களிடம் நீங்கள் மற்ற மதத்தினரை “காபிர்”கள் என்று ஏன் சொல்கிறீர்கள்? என்று கேட்டால் அவர்கள் இறைவனை மறுக்கின்றார்கள், அவனை நிராகரிக்கின்றார்கள் என்று சொல்வார்கள்.

மதமொன்றைப் பின்பற்றி நடக்கும் ஒருவன் எந்த வகையிலும் இறைவனை நிராகரிக்கவோ, மறுக்கவோ மாட்டான். அதேபோல் இறைவனை மறுப்பவன் எந்தவொரு வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று இறைவனை வழிபடவுமாட்டான். பௌத மதத்தைச் சேர்ந்தவன் விகாரைக்குச் செல்லவுமாட்டான். இந்து மதத்தைச் சேர்ந்தவன் கோயிலுக்குச் செல்லவுமாட்டான். கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவன் தேவாலயத்திற்குச் செல்லவுமாட்டான். இவர்கள் தமது வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதே இவர்கள் இறைவனை மறுக்கவுமில்லை, நிராகரிக்கவுமில்லை என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாகும்.

இறைவனை முற்றாக நிராகரிப்பவன் “முல்ஹித்” என்று அழைக்கப்படுவான். தமிழில் நாத்திகன் என்று சொல்லப்படுவான். இவனுக்குப் பள்ளிவாயலுமில்லை, விகாரையுமில்லை, தேவாலயமுமில்லை, கோவிலுமில்லை. இவன் ஒன்றிலும் அடங்காதவன். இவன் பற்றி எந்தவொரு கருத்தும் நான் சொல்வதற்கில்லை.

பொதுவாக பௌதர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள் ஆகியோரை “காபிர்” நிராகரிப்பவர்கள் என்று அழைப்பதற்கான காரணம் அவர்கள் இறைவனை நம்பினாலும்கூட அவனே சர்வ சிருட்டிகளாகவும், படைப்புக்களாகவும், மற்றுமுள்ள சீவ ராசிகளாகவும், பறப்பன, நடப்பன, ஊர்வன அனைத்துமாயும் உள்ளான் என்பதை நிராகரிப்பவர்களாக உள்ளதேயாகும்.

நன்றி : இசுலாமிய வலைதளம் SHUMS

No comments: