*அதிசய மானுடன்*
எங்கோ பொழிய
திரண்ட மேகம்
போகிற போக்கில்
நிலம் நனைத்து...
அதில் துளிர்ப்பது போல்
நின் தலைமையில் கவிபாடி
கொஞ்சம் துளிர்த்தவள்
என்கிற வகையில்
கவிக்கோவே
உம்மை வணங்குகிறேன்!
உருது விதையில்
தமிழாய் முளைத்து
தழைத்தவன் நீ!
உன் அப்பனும் பாட்டனும்
அன்றய அவைக் கவிஞர்கள்
அவர்களுக்கும் மேல் வந்த
சுப்பன் கவிஞன் நீ!
ஐவேளை தொழுகையோடு
ஆறுவேளை
ரூமியின் மஸ்னவிக்குள்
தன்னை புடம்போட்டுக்கொண்ட
தங்கம் நீ!
மாணவர்களின் "கவிராத்திரியில்"
கண்விழித்து ஒளிபாய்ச்சிய
ஒற்றை நிலவு நீ!
அரங்க கவிதைகளின்
தொணியை மாற்றி
ரசிகர்களுக்கு தூண்டில் போட்ட
ரசனை கவிஞன் நீ!
கவிதைகளில்
ஹைக்கூ நீ!
ஏதேன் தோட்டத்தை
வாணியம்பாடிக்கே வரவைத்தவன்
இங்கே விளைந்த ஆப்பிள்கள்
கருநாகங்களையே
கவிதைகளால் காவுவாங்கியவை!
மீன்கொடி நாட்டில் பிறந்து
தோல் தொழில் கொடிகட்டிப்பறக்கும்
ஊருக்குள் வசித்ததால் தான்
மத்தளத்தின் இசையிலும்
செத்த மாட்டின் தோல்
தெரிந்தது உமக்கு!
ஆறாம் விரலாய்
என் பேனா என்ற
ஏழாம் அறிவின்
உச்சம் நீ!
கடைசிப்பக்கம் இல்லாத
துப்பறியும் நவீனத்தை
யாருக்கும் தெரியாமல் படிப்பதுதான்
வாழ்க்கை என்றுச் சொன்ன
வார்த்தை ஜாலன் நீ!
ப(ர்)க்ளி பல்கலைகழகத்தில்
தமிழை
அட்டணங்கால் போட்டு அமரவைக்க
தமிழிருக்கை செய்த
தச்சன் நீ!
நீ படித்த ஆறு ஆண்டுகள்தான்
இந்தக் கல்லூரியின் பொற்காலமென
அறிந்தவர்கள் சொல்லுவர்
அதை நீயும் சொல்லி இருக்கிறாய்
இருக்காதா பின்னே...?
பின்னாளில் நீ பெற்ற
"கோ" பட்டத்திற்கு காரணம்
அந்த நற்காலம் தானே!
கட்டுரை கதைகளுக்குத்தான்
உயரிய விருதென்பதை
உடைத்தெறிந்து
கவிதைக்கும்
ஆலாபனை செய்யவைத்த
அற்புதன் நீ!
அம்மி கொத்த சிற்பி எதற்கு...? என
வெள்ளித்திரையை
விரல்களால் நீக்கிய
ஞானி நீ!
இசையை காதலித்துவிட்டு
கவிதையை திருமணம் செய்தேன் என
பார்ப்பவர்களிடமெல்லாம்
புலம்பிய உனக்கு
இசைஞானி
எடுத்துச் சொன்னது உண்மைதான்...
"அவள் தான் இவள் என"
அதற்கு மேலும்
நான் ஒன்று சொல்கிறேன்
காதலி மனைவியானால்
உன் காது போயிருக்கும்
மனைவி
காதலியாகவே இருப்பதால்தான்
உன் கவிதைகளை கேட்கிறாள்!
நீயும் பனையூரில்தான்
இருந்திருக்கிறாய் ..(2)
சொல்லவே எவ்வளவு பெருமை!
நாலும் இரண்டும் படித்து
சொல்லரசன் ஆனாய்...
இப்பொழுது பனையூர் என்றாலே
பகீர்... என்கிறது...
நாற்பத்து இரண்டுதான்
அடிவயிற்றில் அனல் பாய்ச்சுகிறது!
நிச்சயமாய் நான்
வழிபாட்டுத்தளங்களில்
இருக்கவே மாட்டேன் என்று
இவரிடம் கடவுள் சொன்னதை
இம்மி பிசகாமல்
நம்மிடம் சொன்னார் தானே??
(கேட்காமல்)
தெற்கிலிருக்கும்
வழிகாட்டிக் கற்களையெல்லாம்
திரியாய் திரிக்கிறார்கள்
வடக்கே நின்று கொண்டு!
முத்தமிழ் அறிஞர் கலைஞர்
சன்மானமாய்
நீ வேண்டுமென்ற
தன்மானக் கவிஞன் நீ!
இலைக்கு முன்
மண்டிபோட்டவர்களை
நாம் பார்த்திருக்கிறோம் (2)
மரத்தினை உயர்திணையாக்கி
மனிதனை மண்டிபோடவைத்த
அதிசய மானுடன் நீ!
ஜோ. டெய்சிராணி
11/2/2026
No comments:
Post a Comment