February 23, 2026

வயதான காலத்தில் - நன்றி திருமிகு.நியாண்டர் செல்வன்

"வயதான காலத்தில் கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக்கொண்டு இருந்து என்ன பலன்?" என பலர் கேட்பதுண்டு.

அவர்கள் என்ன கோடிக்கணக்கில் பணத்தை வங்கியில் போட்டுவைத்துக்கொண்டு சும்மாவா இருக்கிறார்கள்? பூர்வீக வீடு, நிலம்னு அவர்கள் இருக்கும் சொத்தின் மதிப்பு ஏறியிருக்கும். 60 வயதில் ஓய்வுபெறுகையில் இருந்த போர்ட்போலியோ மதிப்பு, 70 வயதிற்கு மேல் பல மடங்கு உயர்ந்திருக்கலாம். அப்ப அவர்களுக்கு நிஜமாகவே உடம்பு முடியாமல் போயிருக்கலாம்.

அமெரிக்காவில் நர்சிங் ஹோம் எனும் முதியோர் பராமரிப்பு மையத்தில் தன் தந்தையைச் சேர்த்த ஒருவர் சொன்னார்:

"அங்கே எல்லாம் ஆண்டுக்கு ஒரு நபருக்கு இந்திய மதிப்பில் ரூ. 90 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை வாங்குவார்கள். அங்கே வேலை செய்பவர்கள் எல்லாம் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் இளைஞர்கள். முதியோரை உணர்வுப்பூர்வமாகக் கையாள்வது எப்படி என்றே அவர்களுக்குத் தெரியாது. சும்மா கைவலி, கால்வலி என்றால் பெயின்கில்லரை கொடுத்துவிடுவார்கள். தூக்கம் வரலையா? பிடி தூக்கமாத்திரையை!

முதியவர்கள் டோனட், பீட்சா, கேக்னு எதை கேட்டாலும் கொடுப்பார்கள். நம்ம வீடாக இருந்தால் திட்டுவோம், 'உடம்புக்கு ஆகாது' என்போம். அங்கே அதெல்லாம் கிடையாது. அங்கே போனால் அவர்களுக்குத் தேவை நீங்கள் நீண்ட நாள் அங்கே ஆரோக்கியமாக உயிர்வாழ வேண்டும் என்பதெல்லாம் இல்லை; அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும், அவ்வளவுதான். அங்கே சேர்ந்து நாலைந்து ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. டிமாண்ட் அதிகம், வெயிட்டிங் லிஸ்ட் வேறு உண்டு. ஒருவர் சீக்கிரம் 'போய் சேர்ந்தால்' அந்த இடத்திற்கு அடுத்தவர் வருவார். நிறுவனத்திற்கும் லாபம், சில பிள்ளைகளுக்கும் பாரம் குறையும் எனும் மாடலில்தான் பல இடங்கள் இயங்குகின்றன."

இதுகுறித்து FIRE வாட்ஸாப் குழுவில் நான் எழுதியது:

வயதான காலத்தில் நிறைய சொத்தையும் காசையும் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். ஆண்டுக்கு ரூ. 90 லட்சத்தை ஏதோ ஒரு முதியோர் இல்லத்திற்கு தூக்கிக் கொடுப்பதை விட, உங்கள் வீடு, பங்குகள், சொத்து என உங்கள் பிள்ளைகளிடம் கொடுத்து உங்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லலாம். எடுத்தவுடனேயே மொத்த காசையும் கொடுத்துவிட வேண்டாம். உங்கள் பராமரிப்புக்குத் தேவையானதை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு ஒரு பகுதியைத் தரலாம். உங்கள் காலத்திற்குப் பிறகு நீங்கள் இருக்கும் வீடு மற்றும் இதர சொத்துக்கள் அவர்களுக்குப் போகுமாறு செய்தால் போதும்.

பலரும் "என் பிள்ளைகள் என்னை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை, நான் சொந்தக் காலில் நிற்பேன்" என்று வீராவேசமாகப் பேசுகிறார்கள். ஆனால், முதுமையில் நிதி மோசடிகளில் சிக்குவது (Financial scams), டிமென்ஷியா (Dementia) போன்ற மறதி நோய்கள் வருவது போன்ற எதார்த்தங்களை அவர்கள் யோசிப்பதில்லை. குடும்பம் என்ற அமைப்பின் நோக்கமே ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதுதான்.

பணம் இல்லாவிட்டாலும் பெற்றோரைப் பார்த்துக்கொள்வது பிள்ளைகளின் கடமை என்றாலும், நாம் அவர்களுக்கு ஒரு நிதிச் சுமையாக (Financial burden) மாறிவிடக்கூடாது. அதேசமயம், பிள்ளைகளுக்குத் திருமணமாகிவிட்டால் அவர்களைத் தனிக்குடித்தனம் அனுப்பிவிடுங்கள். உங்களால் உங்கள் காரியங்களைச் செய்துகொள்ள முடியாத ஒரு காலம் வரும்போது மட்டும், அவர்கள் உதவி செய்தால் போதும்

~ நியாண்டர் செல்வன்

No comments: